கரூர் மாநகராட்சி ராயனூர் அடுத்த ஆட்சிமங்கலம் அருகே தென்னந்தோப்பு பகுதியில் மர்மமான முறையில் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது. அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காட்டெருமை இறந்து கிடந்ததை கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மற்றும் கால்நடை மருத்துவர்கள் அதே இடத்தில் காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்தனர். காட்டெருமை எவ்வாறு இறந்தது என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அப்பகுதியில் குழி தோண்டப்பட்டு காட்டெருமை அடக்கம் செய்ய உள்ளனர். மலை பிரதேசங்களிலும், அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே வாழும் காட்டெருமை கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு வந்தது எப்படி என்றும், இந்தப் பகுதிக்கு காட்டெருமை தானாக வந்ததா? அல்லது யாராலும் கடத்தப்பட்டு கொண்டு வரப்பட்டதா? மேலும், காட்டெருமை நோய்வாய்ப்பட்டு இருந்ததா அல்லது இறைச்சிக்காக அடித்துக் கொல்லப்பட்டதா என பல கேள்விகளை வனவிலங்கு ஆர்வலர்கள் கேள்வி எழுப்புள்ளனர்.