கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு பத்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அங்கு கிடைக்கப்பெறும் தொல்லியல் சான்றுகள் மூலம் , கீழடியில் நகர நாகரிகம் நிலவியது உறுதியாகியுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சிகள் மூலம் தமிழர் நாகரிகம் உலகுக்கே முன்னோடியாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து 2500 ஆண்டுகளுக்கு முன்பு கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் முகத்தை மறு வடிவமைப்பு செய்திருக்கின்றனர். கீழடி கொந்தகையில் 800 மீ அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து 3டி முறையில் 2 பழந்தமிழர்களின் முகங்கள் வடிமைக்கப்பட்டிருக்கிறது.
டி.என்.ஏ பகுய்ப்பாய்வு நடத்தி இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது. கீழடி ஆகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான எலும்புக்கூடுகள் 50 வயது மனிதர்களுடையவை என்றும், கொந்தகை பகுதியில் வாழ்ந்த ஆண்கள் 5.7 அடியும், பெண்கள் 5.2 அடி உயரத்திலும் இருந்திருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.