ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டியில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
வழக்கமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோடங்கிபட்டி பட்டாளம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு பிரசாரத்ததை தொடங்குவது வழக்கம். அதே போன்று நேற்றும் அக்கோவிலில் திமுக நிர்வாகிகளுடன் சாமி தரிசனம் செய்த பின்பு உறுப்பினர் சேர்க்கையை செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
அப்பகுதியில் வீடு வீடாக சென்று அவர்களிடம் திமுக அரசின் சாதனை திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கி, திமுகவில் இணைந்து கொள்கிறீர்களா என கேட்டு அவர்களை மொபைல் ஆப் மூலம் உறுப்பினர்களாக சேர்த்தனா்.
கரூர் மாவட்டத்தில் 8 லட்சத்திற்கும் மேல் வாக்காளர்கள் இருப்பதாகவும், மூன்று லட்சத்திற்கு மேலான வாக்காளர்களை திமுகவில் உறுப்பினர்களாக இணைப்பது என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாகவும், இந்த இலக்கை தாண்டி உறுப்பினர் சேர்க்கை இருக்கும் . மக்களின் திமுகவுக்கு உள்ள வரவேற்பை பார்க்கும்போது இதனை புரிந்து கொள்ள முடிகிறது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.