அரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்(25). இவரை அவரது தந்தை தீபக் கண்மூடித்தனமாக 5 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 குண்டுகள் பாய்ந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராதிகா யாதவ் இறந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் தந்தை தீபக்கை கைது செய்தனர்.
அரியானாவை உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது, “துப்பாக்கி குண்டு காயங்களுடன் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனையில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, அவரது வீட்டிற்கு சென்ற போது, அவர் வீட்டில் டென்னிஸ் அகாடமி நடத்தி வந்ததும், அவரது தந்தையால் துப்பாக்கியால் சுடப்பட்டதும் தெரியவந்தது.
ராதிகா யாதவ் டென்னிஸ் அகாடமி நடத்தி வந்தது, தீபக் யாதவிற்கு பிடிக்கவில்லை இதனால் கொலை நடந்ததாக தெரியவந்து உள்ளது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
மேலும் ராதிகா ரீல்ஸ் மோகத்தில் அடிக்கடி ரீல்ஸ் வெளியிட்டு வந்து உள்ளார். இதையும் தீபக் கண்டித்து உள்ளார். இதனால் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்திருக்கலாம் என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ராதிகா யாதவ் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார். பல போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ராதிகா யாதவை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவரது தந்தையிடம் போலீசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.