Skip to content

அரியலூர்… கங்கைக்கொண்ட சோழபுரத்தில் ஆடிதிருவாதிரை விழா.. முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித்திருவாதிரை விழா வருகின்ற 23.07.2025 அன்று அமைச்சர் பெருமக்கள் தலைமையில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு விழா தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (19.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்த மாமன்னன் இராஜேந்திர சோழன் அவர்கள் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மாமன்னன் இராஜேந்திரன் சோழன் அவர்களின் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்கள்.

அந்த வகையில் 2022-ஆம் ஆண்டுமுதல் ஆடித் திருவாதிரை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டிற்கான ஆடித் திருவாதிரை விழா 23.07.2025 அன்று கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவிலில் ஆடித் திருவாதிரை விழா மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. அதனடிப்படையில் இன்றையதினம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், போக்குவரத்து வசதிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

மேலும், தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை மற்றும் கலை பண்பாட்டுத் துறை சார்பில் ஆடித்திருவாதிரை விழா காலையில் மங்கள இசையுடன் துவங்குகிறது. அதனைத்தொடர்ந்து காலை 10.00 மணியளவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு விழாவினைத் தொடங்கி வைத்து விழாப் பேரூரையாற்ற உள்ளார்கள். மேலும், இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர். யாழிசை, தென்னாட்டு பெருவேந்தன் நாட்டிய நாடகம், மாபெரும் கிராமிய இசை, நடன நிகழ்ச்சி (பறை, கரகம், துடும்பாட்டம்), முனைவர்.பர்வீன் சுல்தானா அவர்களின் தலைமையில் பட்டிமன்றம் – சோழர்கள் புகழுக்கு பெரிதும் காரணம் நிருவாகத் திறனே! போர் வெற்றிகளே!, பல்சுவை நிகழ்;ச்சிகள், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், மக்களிசை பாடல்கள், மாமன்னன் இராஜேந்திரசோழன் நாடகம், மயில்காவடி, கிராமிய பாடல்கள், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் மாலை வரை நடைபெறவுள்ளது.

ஆடித்திருவாதிரை விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வசதிக்காக குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் சிறப்பு பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்தில் 23.07.2025 அன்றையதினம் நடைபெறவுள்ள ஆடித்திருவாதிரை விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!