மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், ரயில் நிலைய முகப்பு மேற்கூறையில் பொருத்தப்பட்டிருந்த 4 அடி நீளம், 4 அடி அகலத்தில், தலா 35 கிலோ எடை கொண்ட 2 ஜிஆர்சி ஷீட் பெயர்ந்து விழுந்தது. நள்ளிரவு நேரம் என்பதாலும், மழை பெய்ததாலும் அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ஜி.ஆர்.சி. ஷீட் பொருத்த பயன்படுத்தப்பட்ட ஸ்க்ரூ அளவில் மிக சிறியதாக இருந்ததே விபத்துக்கு காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், மேற்கூரை முழுவதும் ஏற்கெனவே பயன்படுத்திய சிறிய அளவிலான ஸ்க்ரூ அகற்றப்பட்டு, பெரிய ஸ்க்ரூ மாற்றப்பட்டது. இந்நிலையில், ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் முகப்பு மேல்பகுதி காங்கிரீட் இல்லாமல் இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு ஜி ஆர் சி சீட் பொருத்தப்பட்டுள்ளது. பொருத்தப்பட்டிருந்த 2 ஷீட்டுகள் இன்று காலை பெயர்ந்து விழுந்தது பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் தரமானதாக இல்லை என பயணிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அடுத்தடுத்து மேற்ககூறையில் அமைக்கப்பட்டுள்ள ஜி ஆர் சி சீட்டுகள் கட்டுமானப் பணியின் போதே பெயர்ந்து கீழே விழுந்து வருவது ரயில் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தில் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் முறையாக கண்காணிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் கூறிவரும் நிலையில் மேற்கூரை சீட்டுகள் பெயர்ந்து விழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தேசியக்கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கோயில் பின்புறம் கழிப்பிடம் கட்டப்பட்டு வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்