இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, 4-ம் கட்ட பிரச்சாரத்தை செப்.1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மேற்கொள்கிறார். 4-ம் தேதி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதிகள், 2-ம் தேதி மதுரை மேற்கு, வடக்கு தொகுதிகள், 3-ம் தேதி மதுரை மாநகர், மதுரை மத்தியம், தெற்கு ஆகிய தொகுதிகள், 4-ம் தேதி சோழவந்தான், உசிலம்பட்டி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகள், 5-ம் தேதி தேனி மாவட்டம் கம்பம், போடிநாயக்கனூர், பெரியகுளம் தொகுதிகளில் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.செப்.6-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் நத்தம், திண்டுக்கல், நிலக்கோட்டை தொகுதிகளிலும், 7-ம் தேதி ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழநி தொகுதிகள், 9-ம் தேதி கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, 10-ம் தேதி பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை, 11-ம் தேதி மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம், 12-ம் தேதி திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம் தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 கட்ட தொகுதி பிரச்சாரங்களை முடித்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடியின் 4வது கட்ட பிரச்சார பயணத்திலும் கரூர் மாவட்ட தொகுதிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை. கரூர் சுற்றியுள்ள நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்துள்ள எடப்பாடி என்ன காரணத்தினாலோ கரூரை தவிர்த்து வருகிறார். திமுகவின் கொங்கு மண்டல பொறுப்பாளராக இருக்கும் செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூரில் அதிமுக மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அதனை எடப்பாடி புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
