டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன், நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தான். அப்போது, பள்ளிக்கூடத்தின் வாசல் அருகே 3 சிறுவர்கள் அந்த சிறுவனை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, அவர்கள் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து நெஞ்சில் குத்திவிட்டு 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
சிறுவன் நெஞ்சில் குத்திய கத்தியுடன் அப்படியே அருகில் உள்ள பஹர்கஞ்ச் காவல் நிலையத்திற்கு சென்றான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அச்சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுவர்களிடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதற்கு பழிவாங்கும் வகையில் தற்போது இந்த கத்திக்குத்து தாக்குதல் நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்திய 3 மைனர் சிறுவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.