Skip to content

சரியாக படிக்கவில்லை என்று மகனை பள்ளியில் இருந்து நிறுத்தியதால் தாய் தற்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூர், ராதாகிருஷ்ணன் ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தீபா (40). இவர்களது மகன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் அவன் சரியாக படிக்கவில்லை என்று கூறி, பொதுத்தேர்வு எழுத வேண்டாம் என்று பள்ளியில் இருந்து அவனை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தனது மகனின் படிப்பு பாழாகிவிட்டதே என தீபா விரக்தியடைந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல் செல்வம் வேலைக்கு சென்றுவிட்டார். மகனும் வெளியே சென்றிருந்தார். இதனால் வீட்டில் தனியாக இருந்த தீபா, ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டினார். பின்னர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதற்கிடையே வீட்டுக்கு வந்த செல்வம், வீட்டின் அறை பூட்டப்பட்டு இருப்பதை பார்த்தார். கதவை தட்டி பார்த்தார். ஆனால் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், கதவை உடைத்து திறந்து பார்த்தார். அப்போது தீபா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

error: Content is protected !!