பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த 2023ம் ஆண்டு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டுகளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. ஆனால், இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.
இந்நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் அறிவித்துள்ளன. அதேவேளை, இந்த 3 நாடுகளின் அறிவிப்பிற்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இது ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவான நிலைப்பாடு என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.