கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த முகமது இக்பால், வயது 50. அண்ணாநகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார்.வழக்கம்போல் நேற்று (23.09.2025) இரவு 10 மணியளவில் கடையை பூட்டி வீடு திரும்பிய அவர், இன்று காலை கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் தோராயமாக ரூ.52,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இக்பால், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட அரவக்குறிச்சி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.