கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவர். இவர் கடலூர் பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவதன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து அவர்கள் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ராமநாத குப்பம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது மாயமான கல்லூரி மாணவர் 45 வயது மதிக்கத்தக்க பெண்னுடன் நிற்பதை பார்த்தனர். உடனே போலீசார் அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திருமணமான 45 வயது பெண்ணுக்கும் கல்லூரி மாணவருக்கும் கடந்த சில நாட்களாக பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண் கல்லூரி மாணவரை ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அப்பெண் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அப்பெண்ணை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

