அமெரிக்காவில் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் கினிசி நகரின் அருகே கிராண்ட் பிளாங் டவுன்ஷிப் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்நிலையில், இந்த வழிபாட்டு தலத்தில் நேற்று பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழிபாட்டு தலத்திற்கு 40 வயது நிரம்பிய தாமஸ் ஜாக்கப் சன்போர்ட் என்ற நபர் காரில் வந்தார்.
காரில் இருந்து இறங்கிய தாமஸ் தான் வைத்திருந்த 2 துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு மத வழிபாட்டு தலத்திற்கு சென்றுள்ளார். அங்கு பிரார்த்தனை செய்துகொண்டிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். மேலும், மத வழிபாட்டு தலத்திற்கு தீ வைத்தார். இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, போலீசாரை நோக்கி தாமஸ் சுட்டார். இதையடுத்து போலீசார் நடத்திய பதிலடி துப்பாக்கி சூட்டில் தாமஸ் கொல்லப்பட்டார். பின்னர், படுகாயமடைந்த அனைவரையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த, அமெரிக்க அதிபர் டிரம்ப், இது குறித்து சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; மிச்சிகனில் உள்ள கிராண்ட் பிளாங்கில் உள்ள தேவாலயத்தில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு குறித்து எனக்கு விளக்கப்பட்டது. எப்பிஐ அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இறந்துவிட்டார். இது அமெரிக்காவில் கிறிஸ்தவர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர்களது குடும்பங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். நமது நாட்டில் இந்த வன்முறை உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.