தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகத்தின் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்தத் தீவிர நடவடிக்கையின் நோக்கம், குளறுபடிகள் இல்லாத ஒரு தூய்மையான வாக்காளர் பட்டியலை உருவாக்குவதாகும்.
கடந்த சில வாரங்களாக நடைபெற்ற சரிபார்ப்புப் பணிகளில், இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்துள்ள இரட்டைப் பதிவுகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.
அதிகாரப்பூர்வமற்றத் தகவல்களின்படி, தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமான போலி மற்றும் தேவையற்ற பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கண்டறிய முடியாத, இடம் மாறிய அல்லது இறந்த வாக்காளர்கள் என்ற தனிப் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் புதிய கால அட்டவணை முதலில் டிசம்பர் 16-ஆம் தேதி வரைவு பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுத் தேர்தல் ஆணையம் கால அவகாசத்தை மாற்றியமைத்தது.
படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
திருத்தப்பட்ட விவரங்களுடன் கூடிய வரைவு பட்டியல் டிசம்பர் 19, 2025 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடிகளில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

