உத்தர பிரதேசத்தின் நாகினா பகுதியில் நந்த்பூர் கிராமத்தில் பழமையான அனுமன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில், கிராமவாசிகள் சாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், தெரு நாய் ஒன்று அனுமன் சிலையை சுற்றி, சுற்றி வந்துள்ளது. அதுவும் இடதுபுறத்தில் சுற்றி வந்துள்ளது. பல மணிநேரம் இதுபோன்று நடந்துள்ளது. சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் நீண்ட நேரம் இது நீடித்துள்ளது. இதனை கவனித்த கிராமவாசிகள் சிலர் பரபரப்பாக பேசி கொண்டனர். இதன்பின்னர் 2 நாள் கழித்து துர்க்கை அம்மனை சுற்றி, சுற்றி வந்துள்ளது. இதில் சோர்ந்து போன அந்த நாய் ஒரு காலை தூக்கியபடி சென்றுள்ளது. பலரும் அதனை சாமியின் வடிவம் என கூறி வழிபட துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவ குழுவினர் தகவல் கிடைத்து சென்று தெரு நாயை பரிசோதனை மேற்கொண்டனர். இதில், நாய்க்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அது மருத்துவ பாதிப்புக்கு உட்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அதற்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். உடல்நலம் பாதித்த அதற்கு உரிய சிகிச்சை அளிக்காமல் சாமியாக நினைத்து பலரும் வழிபட்ட சம்பவத்திற்கு சிலர் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

