கோவை கொடிசியா வளாகத்தில் வி4 வால் இன்டீரியர் என்ற கட்டுமான நிறுவனம், 24 மணி நேரத்தில் ஒரு கட்டிடத்தை அமைக்கும் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டது. ஆனால், அந்நிறுவன ஊழியர்கள் திட்டமிட்ட நேரத்தை விட மிக விரைவாக, அதாவது 11 மணி நேரத்திற்குள்ளாகவே சுமார் 1,000 சதுரடி பரப்பளவில் அழகான மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டிடத்தை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர்.
முற்றிலும் உலோகங்கள் மற்றும் மரப்பலகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உடனடி கட்டிடத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாகப் பெயர்த்துச் செல்ல முடியும். இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் கூறுகையில், “இயற்கைச் சீற்றங்களைத் தாங்கும் வகையில் முழு பாதுகாப்புடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரண கட்டிடங்களை விட இதில் 40% செலவு குறையும். மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இதில் பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்தார்.
அந்நிறுவனத்தின் இந்த அசாத்திய முயற்சியைப் பாராட்டி, ‘பிஎன்ஐ உலக சாதனை நிறுவனம்’ அதற்கான உலக சாதனை சான்றிதழை வழங்கி கௌரவித்தது.

