Skip to content

மதுரையில் பிரம்மாண்டம்: பிப். 28-ல் பிரதமர் மோடி வருகை

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் (ஏப்ரல்-மே 2026) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் பொதுக்கூட்டங்களும் வேகமெடுத்துள்ளன. குறிப்பாக, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

கடந்த ஜனவரி 23-ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, “தமிழகத்தின் வளர்ச்சிக்கு அ.தி.மு.க – பா.ஜ.க இணைந்த இரட்டை என்ஜின் ஆட்சி தேவை” என்று முழங்கினார். இதற்குப் பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் எந்தக் காலத்திலும் டப்பா என்ஜின் ஆட்சி எடுபடாது” என்று விமர்சித்தார். இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “மக்களால் அங்கீகரிக்கப்பட்ட டாப் என்ஜின் நாங்கள் தான்” என்று கூறி இந்த விவாதத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த அரசியல் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 28-ம் தேதி (சனிக்கிழமை) மீண்டும் தமிழகம் வரவுள்ளார். மதுரையில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.

அரசியல் கூட்டத்துடன் சேர்த்து, மதுரையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் முதற்கட்ட வளாகத்தை பிரதமர் மோடி அன்று திறந்து வைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட இந்தத் திட்டம், தற்போது முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில் திறக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தேர்தல் நெருங்கும் வேளையில் பிரதமரின் இந்த வருகையும், எய்ம்ஸ் திறப்பு விழாவும் தமிழக அரசியலில் மிக முக்கியமான நகர்வுகளாகப் பார்க்கப்படுகின்றன.

error: Content is protected !!