கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செம்மண்ட் பகுதியில், லாரியில் வெடிமருந்துகள் கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செம்மண்ட் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் வெங்காய மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று நின்றிருந்தது.
போலீசார் அந்த லாரியைச் சோதனையிட்டபோது, மேலே அடுக்கி வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகளுக்கு அடியில் ரகசியமாக வெடிமருந்துகள் பதுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து சுமார் 10,000 ஜெலட்டின் குச்சிகள், டெடனேட்டர்கள், ஒயர்கள் மற்றும் இதர வெடிமருந்துப் பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்தக் கடத்தல் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள போலீசார், முதற்கட்ட விசாரணையில் இந்த வெடிமருந்துகள் சட்டவிரோத கல் குவாரிகள் மற்றும் சுரங்கங்களில் பயன்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

