Skip to content

மதுபோதையில் காரை ஓட்டி விபத்து – தொழிலதிபர் மகனுக்கு பொதுமக்கள் தர்ம அடி

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள விஐபி சாலையில், பிரபல புகையிலை நிறுவன அதிபர் கே.கே. மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ரா, இன்று காலை தனது லம்போகினி காரில் அதிவேகமாகச் சென்றுள்ளார். மதுபோதையில் இருந்த அவர், காரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் தாறுமாறாக ஓடி முதலில் ஒரு ஆட்டோ மீதும், பின்னர் சாலையோரம் நின்றிருந்த பைக் மீதும் பயங்கரமாக மோதியது.

இந்த மோதலின் வீரியத்தில் பைக்கில் இருந்த நபர் சுமார் 10 அடி தூரத்திற்கு அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி கார் நின்றது. இந்த விபத்தில் தவுபிக் அகமது என்பவர் உட்பட மொத்தம் 6 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய சிவம் மிஸ்ரா அங்கிருந்து தப்பிக்க முயன்றார். அவருக்குப் பாதுகாப்பாக மற்றொரு காரில் வந்த அடியாட்கள், அங்கு திரண்ட பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சொகுசு காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, சிவம் மிஸ்ராவை வெளியே இழுத்து தர்ம அடி கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிவம் மிஸ்ராவை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்துக்குள்ளான டெல்லி பதிவெண் கொண்ட லம்போகினி காரைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், தொழிலதிபர் மகன் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!