பஞ்சாப் மாநிலம் மான்சா பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஹேப்பி சிங், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2024-ஆம் ஆண்டு ரமந்தீப் கவுர் (30) என்ற பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்டார். சாதி மறுப்புத் திருமணம் என்பதால் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இவர்கள் தனியாக வசித்து வந்தனர். இதில் ஏற்பட்ட மனக்கசப்பால் மனைவியைக் கொலை செய்யத் திட்டமிட்ட ஹேப்பி சிங், அவரை காரில் பாட்டியாலா பசியானா பாலம் அருகே உள்ள பக்ரா கால்வாய்க்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு காரை வேண்டுமென்றே ஆற்றுக்குள் பாயச் செய்துள்ளார். மனைவி காரினுள்ளே தவித்துப் பலியாக, தான் மட்டும் நீந்தித் தப்பியதாக விபத்து நாடகமாடியுள்ளார். ரமந்தீப் கவுரின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் காரை மீட்டபோது, டிரைவர் இருக்கையின் கதவு மட்டும் முன்கூட்டியே திட்டமிட்டுத் திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கணவன் தப்பிப்பதற்காகக் கதவைத் திறந்து வைத்துவிட்டு, மனைவியைக் காரினுள்ளே பூட்டி மூழ்கடித்ததை ஆதாரத்துடன் கண்டுபிடித்த போலீசார், ராணுவ வீரர் ஹேப்பி சிங்கை கொலை வழக்கில் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
