பணமோசடி வழக்கு தொடர்பாக, ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் மனைவியும் முன்னாள் நடிகையுமான டீனா அம்பானிக்கு அமலாக்கத் துறை (ED) மீண்டும் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டீனா அம்பானி, இந்த வழக்கு தொடர்பாக நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, விரைவில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க் நகரின் மேன்ஹாட்டனில் உள்ள சொகுசு குடியிருப்பு வாங்கியதில் ஏற்பட்ட பண பரிவர்த்தனை தொடர்பாக டீனா அம்பானியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் புனித் கார்கை அமலாக்கத் துறை சமீபத்தில் கைது செய்தது.

