Skip to content

தாறுமாறாக ஓடி பெட்டிக் கடைக்குள் புகுந்த மினி பஸ்..கோவையில் பரபரப்பு

கோவை, கணுவாய் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்து, அங்கு இருந்த பொதுமக்களையும், பயணிகளையும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை வரை செல்லும் மினி பேருந்து ஒன்றின் ஓட்டுநராகச் சிவராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இன்று காலை கணுவாய் பேருந்து நிலையத்தில் அந்தப் பேருந்து நிறுத்தப்பட்டு இருந்தது. ஓட்டுநர் சிவராஜ் பேருந்தில் இல்லாத நேரத்தில், அந்தப் பேருந்தின் நடத்துனருக்குத் திடீரென பேருந்தை ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் வந்து உள்ளது. டிரைவர் சீட்டில் அமர்ந்து அவர் பேருந்தை ஸ்டார்ட் செய்து ஓட்ட முயன்ற போது, அவரது கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து தாறுமாறாக ஓடியது.

வேகமாகச் சென்ற பேருந்து, பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் அருகில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் மோதி நின்றது. திடீரென பேருந்து கடைக்குள் மோதியதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், சிதறி ஓடினர். நல்லவேளையாக அந்தச் நேரத்தில் கடையிலும், இருசக்கர வாகனங்கள் அருகிலும் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்த கணுவாய் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, ஓட்டுநர் சிவராஜைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

​முறையான பயிற்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இதுபோன்று நடத்துனர்கள் பேருந்தை இயக்க முயல்வது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எனப் பொதுமக்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விபத்தால் கணுவாய் பேருந்து நிலையப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!