திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனை யில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பிறந்து 4 நாட்கள் மட்டுமே ஆன ஆண் குழந்தையை மர்ம பெண் கடத்தி சென்றுள்ளார். திருச்சி மாவட்டம், துறையூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி சுகன்யா(23) இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுகன்யாவை பெற்றோர் சில தினங்களுக்கு முன்பு பிரசவத்துக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடந்த 11ஆம் தேதி அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதைத்தொடர்ந்து பிரசவ வார்டில் தாய்- சேய் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை 7 மணியளவில் பக்கத்து பெட்டில் இருந்த மீனாட்சி என்ற பெண்மணி,
குழந்தைக்கு தடுப்பூசி போட டாக்டர் அழைக்கிறார். என்னிடம் குழந்தையை
கொடு. நான் தடுப்பூசி போட்டுக் கண்டு குழந்தையை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என கூறி சுகன்யாவிடம் குழந்தையை வாங்கிக்கொண்டு சென்றார்.
அவரும் நம்பி குழந்தையை அவரிடம் ஒப்படைத்தார்..பின்னர் வெகு நேரமாகியும் அவர் திரும்பவில்லை . இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா தடுப்பூசி செலுத்தும் இடத்துக்கு சென்று பார்த்தார். ஆனால் மீனாட்சியையும் காணவில்லை. தனது குழந்தையையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அழுது புலம்பினார்.
பின்னர் இது பற்றி சுகன்யா திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி குழந்தையை கடத்திச் சென்ற பெண் குறித்து விசாரித்து வருகின்றனர். குழந்தையை கடத்திச் சென்ற மீனாட்சி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெட்டில் சேர்ந்துள்ளார். கருச்சிதைவு ஏற்பட்டதால் உடல் சோர்வு ஏற்பட்டதாக கூறி அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆக இருந்ததாக
நர்சுகள் தெரிவித்தனர். பிரசவ வார்டில் ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

