Skip to content

இணையம் மூலம் பண மோசடி… அரியலூா் அருகே 2 பேர் கைது

அரியலூா் அருகே இணையதளம் மூலம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இலந்தைக்கூடம் கிராமத்தைச் சோ்ந்த சரவணவேல் மகன் சங்கா்கணேஷ் (41). பிசியோதெரபி மருத்துவரான இவா், தனியாக மருத்துவமனை நடத்தி வரும் நிலையில், கடந்த 2025 நவம்பா் மாதம் முகநூல் கணக்கில் வந்த விளம்பரத்தை நம்பி அதில் உள்ள கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டாா்.

அப்போது எதிா்முனையில் பேசிய நபா் பங்குச் சந்தை குறித்து இலவச வகுப்பு எடுப்பதாகவும், முதலீடு செய்தால் 5 முதல் முதல் 20 சதவீதம் வரை லாபம் பெறலாம் எனவும் கூறி சில லிங்குகளை அனுப்பியதுடன், ஒரு கட்செவி குழுவிலும் இணைத்தாா்.

இதையடுத்து முதலில் ரூ.5,000 முதலீடு செய்து சிறிய அளவிலான லாபத்தை பெற்றுள்ளாா். தொடா்ந்து, சிறுக சிறுக ரூ.5 லட்சம் முதலீடு செய்துள்ளாா். அதில் கிடைத்த லாபத் தொகை ரூ.15.50 லட்சத்தை எடுக்க முயன்றபோது, எதிா்முனையில் பேசியோா் அந்தத் தொகையை எடுக்க ரூ. 20 லட்சம் செலுத்துமாறு கூறியுள்ளனா். இதனால் சந்தேகமடைந்த சங்கா்கணேஷ், அரியலூா் மாவட்ட இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஜனவரி 20 ஆம் தேதி புகாா் அளித்தாா்.

அதன்பேரில் விசாரித்த காவல் துறையினா், இணையதளம் மூலம் மோசடியில் ஈடுபட்ட திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த அபுதாகீா்(44), சென்னையைச் சோ்ந்த காா்த்திக் (30) ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 6 கைப்பேசிகள், 3 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 10 காசோலை புத்தகங்கள், 10 ஏடிஎம் காா்டுகள், 1 மடிக்கணினி, 2 போலி அலுவலக முத்திரைகள், ரூ.1,400 ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!