உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் ஹஜரிபூர்வா கிராமத்தில் வசித்து வந்தவர் பாபா சுரேஷ் தாஸ். அவருக்கு 100 வயது இருக்க கூடும் என கூறப்படுகிறது. கடந்த 50, 60 ஆண்டுகளாக வனப்பாதுகாப்பு முகாம் அமைந்த பகுதிக்கு அருகே உள்ள கோவிலுக்கு செல்வது வழக்கம்.
சில சமயம் இரவில் கோவிலிலேயே அவர் தங்கி விடுவார். நேற்றிரவு 8.05 மணியளவில் இதேபோன்று கோவிலில் தங்கியிருந்த அவரை அந்த வழியே வந்த யானை ஒன்று மிதித்து, தாக்கியுள்ளது.
இதில் அவர் பலியாகி உள்ளார். இதுபற்றி அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை செய்ததில், யானையின் கால் தடங்கள் மற்றும் சாணம் ஆகியவை அந்த பகுதியருகே இருந்துள்ளன. சாமியாரின் உடலில் ஆழ்ந்த காயங்களும் உள்ளன. கால்கள் மற்றும் பிற பாகங்களிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டு உள்ளன.
இதனை வைத்து சாமியாரை யானை தாக்கியது என உறுதி செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை மாலை லகிம்பூரை சேர்ந்த 45 வயது பெண் மற்றும் அவருடைய 2 மகன்களை காட்டு யானை ஒன்று தாக்கியுள்ளது. இதில், அந்த பெண் பலியானார்.
அது நடந்து 30 மணிநேரத்திற்குள் மற்றொரு யானை தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி வன துறை அதிகாரிகள் எச்சரித்து விட்டு சென்றுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடந்தும் தடுப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

