திருவிழாவுக்கு சென்று திரும்பியபோது மனைவியின் கண்ணெதிரே கள்ளக்காதலனை நடுரோட்டில் அடித்து கொன்ற கணவர், அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஜக்தியாலா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கங்காதர் (35). இவருக்கும் வைஷாலி (29, பெயர் மாற்றம்) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. ஒரு மகன், மகள் உள்ளனர். கங்காதர், வளைகுடா நாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரில் உள்ளனர்.
இந்நிலையில் வைஷாலிக்கும், அருகே உள்ள போரண்ட்லா கிராமத்தை சேர்ந்த விஸ்வநாத் (31) என்பவருக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன் வைஷாலி தனது இரு குழந்தைகளையும் விட்டு விட்டு விஸ்வநாத்துடன் சென்றுவிட்டார். பின்னர் ஜக்தியாலா நகரில் உள்ள பைபாஸ் சாலை அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விஸ்வநாத்தும், வைஷாலியும் கணவன், மனைவி போல் வசித்து வந்தனர்.
இரு குழந்தைகளையும் உறவினர்கள் கவனித்து வந்தனர். இந்த தகவல் கங்காதருக்கு தெரிய வந்தது. இந்நிலையில் வளைகுடா நாட்டில் இருந்து கங்காதர், தனது சொந்த ஊருக்கு வந்தார். விசாரித்தபோது மனைவிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டதையும் குழந்தைகள் தவிப்பதையும் அறிந்து மன வேதனை அடைந்தார். இருந்தாலும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று கருதிய கங்காதர், தனது உறவினர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, மனைவியை தன்னுடன் வரும்படி அழைத்தார். வைஷாலி வரவில்லையாம்.
இதனால் விஸ்வநாத் மீது, கங்காதர் கடும் ஆத்திரமடைந்தார். அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டாராம். இந்நிலையில், சிவராத்திரியை முன்னிட்டு நேற்று விஸ்வநாத்தும், கள்ளக்காதலி வைஷாலியும் அருகே உள்ள சாரங்கபூர் அடுத்த துப்பரஜன்னவில் உள்ள கோயில் திருவிழாவுக்கு சென்று விட்டு பைக்கில் இரவு திரும்பி கொண்டிருந்தனர். இதையறிந்த கங்காதர், தனது நண்பர்களுடன் ஜகதியாலா பைபாஸ் சாலையில் காத்திருந்தார். அப்போது பைக்கில் வந்த அவர்களை பார்த்ததும் மேலும் ஆத்திரமடைந்த கங்காதரும், அவரது நண்பர்களும் சேர்ந்து வைஷாலியின் கண்ணெதிரே விஸ்வநாத்தை கட்டையால் சரமாரியாக தாக்கினார்களாம்.
இதில் விஸ்வநாத் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் கங்காதரும், நண்பர்களும் தப்பியோடிவிட்டனர். கண்ணெதிரே நடந்த சம்பவத்தை கண்ட வைஷாலி கதறி அழுதார். இதுகுறித்து விஸ்வநாத்தின் தந்தை சந்திரய்யா, போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதர் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

