காரைக்குடி அருகே, சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, மித்திரங்குடியை சேர்ந்தவர் கருப்பையா-பவானி தம்பதியரின் மகள் தீபா (20). இவர், காரைக்குடி அரசு கலைக்கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 6ம் தேதி புதுவயல் பகுதியில் டூவீலரில் சென்றுகொண்டிருந்தபோது நடந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் மூளைச் சாவு அடைந்தார். இதனை அடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியின் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரி நோயாளிகள் உள்ளிட்ட நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மாணவியின் உடல் அவரது சொந்த ஊரான மித்திரங்குடி கிராமத்திற்கு நேற்று கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அரசு சார்பில் மாணவி உடலுக்கு தேவகோட்டை சப்-கலெக்டர் ஆயுஷ் வெங்கட், காரைக்குடி வட்டாட்சியர் ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், கிராம மக்கள் திரண்டு மாணவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

