பொள்ளாச்சி கோவை சாலை சிடிசி மேடு பகுதியில் 9 கோடியே 83 லட்சம் ரூபாய்மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தை இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடந்த விழாவில் ஆழியார் அணை நீர் ஆதாரமாக உள்ள கோட்டூர், வேட்டைக்காரன் புதூர்பேரூராட்சி மற்றும் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 ஊரக குடியிருப்புகளுக்கான 26 கோடி ரூபாய் செலவில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மறு சீரமைப்பு பணியையும் தொடங்கி வைத்தார்.
மேலும் சூலூர், வால்பாறை, கிணத்துக்கடவு தொகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் 72 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார மைய கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் நியாய விலை கடை கட்டடங்களையும் திறந்து வைத்தார். மேலும் பொள்ளாச்சி புதிய திட்ட சாலைக்கு பொள்ளாச்சி மகாலிங்கம் சாலை பெயர் சூட்டப்பட்டதையும் திறந்து வைத்தார்,இதனைத் தொடர்ந்து மகாலிங்கபுரத்தில் கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற அலுவலகத்தையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி, மாவட்ட ஆட்சியர் பவன் குமார், பொள்ளாச்சி நகரமன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

