T20 உலகக் கோப்பை 2026-இன் இறுதிப்போட்டியில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது. இதன்மூலம் இந்தியா மூன்றாவது முறையாக கோப்பை வென்றது. முதல் அணியாக தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பை வென்ற சாதனையையும் படைத்தது. இந்த வெற்றியில் இந்திய பேஸ் பவுலர் ஜஸ்பிரித் பும்ராவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது.
முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான், இறுதிப்போட்டிக்குப் பிறகு தனது யூடியூப் சேனலில் பேசியபோது, பும்ராவை “ஒருபோதும் யாரும் அவருக்கு இணையாக வர முடியாது” என்று புகழ்ந்தார். “அவர் மிகவும் சிறப்பான வீரர். அவருக்கு மாற்று யாரும் வர முடியாது” என்று பதான் உணர்ச்சிபூர்வமாக கூறினார். பும்ரா இந்த டூர்னமென்ட்டில் 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி, வருண் சக்ரவர்த்தியுடன் இணைந்து அதிக விக்கெட் எடுத்த பவுலர்களில் ஒருவராக இருந்தார்.
அவரது சராசரி 12.2, ஸ்ட்ரைக் ரேட் 12, எகானமி ரேட் 6.21 என்ற சிறப்பான புள்ளிவிவரத்தை பதிவு செய்தார். இறுதிப்போட்டியில் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இர்பான் பதான் மேலும் கூறியதாவது, “உலகக் கோப்பையில் அணி 250 ரன்கள் எடுக்கும் போது, எதிரணியை முழங்காலில் நிற்க வைக்கும் பவுலர் அவர். அவரது எகானமி ரேட் 6-ஐ விட குறைவாகவே இருந்தது.
இது மிகப்பெரிய சாதனை.” பும்ரா பல சமயங்களில் ஸ்லோ பந்துகளை வீசியும், நியூசிலாந்து பேட்டர்கள் அதை அடிக்க முடியவில்லை என்று பதான் சுட்டிக்காட்டினார்.“இறுதிப்போட்டியில் அவரது முதல் 3 ஓவர்களில் 18 பந்துகளில் 14 பந்துகள் ஸ்லோ பந்துகள். இதை யாராலும் செய்ய முடியாது. பேட்டர்கள் அவரது ஸ்லோ பந்தை எதிர்பார்த்தாலும் அடிக்க முடியவில்லை. இது பும்ராவின் தனித்துவமான திறன்” என்று பதான் பாராட்டினார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடிய தனக்கு இதுபோன்ற பவுலரை பார்த்ததில்லை என்றும் கூறினார்.இறுதியாக, “வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அவர் GOAT (Greatest Of All Time). பெரிய போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுபவர். அவர் இருக்கும் வரை இந்திய அணி உலக அளவில் தலையை உயர்த்தி நடக்கும். அவரை பார்ப்பது பாக்கியம்” என்று இர்பான் பதான் பும்ராவை பெருமையுடன் பாராட்டி முடித்தார். இந்த வெற்றி இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.

