தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி தேர்வு நிறைவு பெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் கல்வி மாவட்டம் என 109 தேர்வு மையங்களில் 11,345 மாணவர்கள், 11,171 மாணவிகள் என மொத்தம் 22,516 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இதில் விழுப்புரம் நகரில் உள்ள மையங்களில் கடந்த 9ம் தேதி வேதியியல் பாடப்பிரிவுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. அப்போது மாவட்ட கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்ட நிலையான பறக்கும் படையினர், தேர்வின்போது மாணவ, மாணவிகளை கண்காணித்து வந்தனர். அப்போது விழுப்புரம் நகரில் சில தேர்வு மையங்களில் மாணவர்கள் பிட் அடித்ததை கண்காணிக்க தவறியதாக புகார் மாவட்ட கல்வி அலுவலர் அறிவழகனுக்கு வந்தது.
இதையடுத்து, நிலையான பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி, 2 ஆசிரியைகள், 3 ஆசிரியர்கள் என 5 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் இந்த ஆசிரியர்கள் முறையான விளக்கம் அளிக்கும்வரை தேர்வு கண்காணிப்பில் ஈடுபடமாட்டார்கள் என தெரிவித்தனர். விசாரணைக்குபின் கல்வித்துறை 5 ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

