அரியலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையொட்டி மசூதிகளில் நடைபெற்ற சிறப்புதொழுகையில் பெருந்திரளானோர் இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர்.
ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் தங்களது நோன்பு முடிந்து இன்று ஈகைப் பெருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாக் கொண்டாடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ரம்ஜான் பண்டிகையையொட்டி அரியலூர் டவுன் பெரிய பள்ளிவாசல், மஸ்ஜிதே முஹம்மதியா பள்ளிவாசல், மஸ்ஜிதே உமர் பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து சிறப்புத் தொழுகையில் கலந்துகொண்டனர். மேலும், தங்களது நண்பர்களும், உறவினர்களும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜுபிலி ரோட்டில் அமைந்துள்ள பள்ளிவாசலில் ரமலான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கினர். ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் பங்கேற்றனர்.

