டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி தொடர் கட்டணங்களுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது, இனி சந்தாக்கள், மின்சாரக் கட்டணம் மற்றும் மாதத் தவணைகளுக்கு தானாகவே டெபிட் செய்யும் ஆப்ஷன் கொடுத்திருந்தால், ஓடிபி பதிவிடாமலேயே வங்கி கணக்கில் இருந்து தொகை பிடித்தம் செய்யப்படும்.
ரூ.15,000 வரையிலான தொகைக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும். முதல்முறை இந்த சேவையை பதிவு செய்யும் போது மட்டும் கூடுதல் பாதுகாப்புச் சரிபார்ப்பு செய்தால் போதும். அதன் பிறகு குறிப்பிட்ட தொகை தானாகவே கழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.15,000-க்கு அதிகமான தொகையை செலுத்தும்போது வழக்கம்போல ஓடிபி அல்லது கூடுதல் பாதுகாப்புச் சரிபார்ப்பு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாதம் தோறும் செலுத்தப்படும் கட்டணங்கள் தற்போது உள்ள நடைமுறையால் சில நேரங்களில் தோல்வி அடைகின்றன. ஓடிபி மிகவும் தாமதமாக வந்து சேருதல், செல்போன்களுக்கு சில நேரங்களில் உரிய சிக்னல்கள் கிடைக்காமல் போவது, பயனர்கள் ஓய்வில் இருக்கும் நேரம் போன்ற காரணங்களால் ஓடிபியை பதிவிட முடியாமல் போகிறது. இதனால் சப்ஸ்கிரிப்ஷனுக்கான கட்டணங்கள் செலுத்துவதில் இடையூறு ஏற்படும்.
ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள ஓடிபி அல்லாத நடைமுறையால் இந்த சிரமங்கள் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
