சேலத்தில்வாக்குச்சாவடி முகவராக தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த திமுக தொண்டர் நேற்று பிற்பகலில் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், அவரது மறைவின் சோகத்தை தாங்க முடியாத தாயாரும் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாரமங்கலம் அருகே, அத்திக்காட்டானூர் வாக்குச்சாவடியில் நேற்று திமுக வின் சார்பில் வாக்குச்சாவடி முகவராக தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த திமுக தொண்டர் மாரியப்பன், வாக்குச் சாவடியிலேயே திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவரது மரணம் குறித்து தகவல் அறிந்த சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன், உயிரிழந்த மாரியப்பன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் இன்று காலை திமுக தொண்டர் மாரியப்பனின் தாயார் பழனியம்மாள், மகன் இறந்த அதிர்ச்சியில் இறந்துவிட்டார். திமுக தொண்டர் மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் திடீரென அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தகவலறிந்த, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் உடனடியாக நேரில் சென்று , உயிரிழந்த பழனியம்மாளின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, தேர்தல் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த திமுக தொண்டர் மாரியப்பனின் குடும்பத்திற்கு உதவும் வகையில், அவரது மனைவி ராதாவிடம் மத்திய மாவட்ட திமுக சார்பில் 5 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தார். அமைச்சருடன் தாரமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட திாமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
