கருப்பு’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதற்கு ரசிகர்களிடம் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டுள்ளார் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி.காரில் இருந்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், உணர்ச்சி பொங்க கூறியதாவது“எல்லாருக்கும் வணக்கம். காலையிலேயே படம் பார்ப்பதற்காக தியேட்டருக்கு வந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இது நடக்கவே கூடாது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பயணம் செய்து காலை 9 மணிக்கு தியேட்டருக்கு வந்த அனைவருக்கும் மனமார்ந்த மன்னிப்பு. படம் பார்ப்பது நம்முடைய அன்றாட பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கான ஒரு வழி. அந்த மகிழ்ச்சியை தர முடியாமல் போனதற்கு வருத்தம்.நானும் இதை எதிர்பார்க்கவில்லை.
ஆனால் இன்று மாலை 6 மணியிலிருந்து பிரச்சனைகள் தீர்ந்து படம் ரிலீஸ் ஆகும் என நம்புகிறேன். மே 14ஆம் தேதி ‘கருப்பு’ படம் பெரிய பிளாக்பஸ்டராக வெளியாகும் என நான் மனதுக்குள் தொடர்ந்து நினைத்து வந்தேன். கடவுள் நிச்சயம் இந்தப் படத்தை இன்று சாயங்காலம் வெளியாகச் செய்வார்.
சூர்யா சார் உள்ளிட்ட பலர் பெரிய தியாகங்களைச் செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு மீண்டும் ஒருமுறை வருத்தம். ஆனால் இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும். இது நல்ல படமாக வரும் என நான் நம்புகிறேன்.” என கூறியுள்ளார். ரசிகர்களிடம் உணர்ச்சி பொங்க பேசிய பாலாஜியின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
