மூன்று நாள் பயணமாக சீனா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அதிபர் ஜி ஜின்பிங் உற்சாக வரவேற்பு அளித்தார். இதைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்கள் நடத்தும் பேச்சுவார்த்தையில் வர்த்தகம், ஈரானுடனான போர் நிறுத்தம் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் மோதல் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துக்கான கடல்வழி பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. கச்சா எண்ணெய் விலை உலகளவில் அதிகரித்து, எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம், உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற விளைவுகள் உருவாகின. இதன் தாக்கம் ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளின் பொருளாதாரத்தையும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.
இத்தகைய சூழல்களுக்கு இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 நாள் பயணமாக வாஷிங்டனில் இருந்து ஏர்போர்ஸ் ஓன் விமானம் மூலமாக நேற்று சீனா புறப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். அவருடன் உள்துறை அமைச்சர் மார்க் ரூபியோ, ராணுவ அமைச்சர் பீட்டர் ஹெக்சேத், தொழிலதிபர் எலான் மஸ்க், ஆப்பிள் தலைமை அதிகாரி டிம் குக், போயிங் விமான நிறுவன தலைமை அதிகாரி கெல்லி ஓர்ட்பெர்க், நிவீடியா சிப் நிறுவன அதிகாரி ஜென்சன் ஹூவாங் உள்ளிட்டவர்கள் சென்றனர்.
இன்று பெய்ஜிங்கில் உள்ள ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ மாளிகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், டிரம்ப்பிற்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். இதில் ராணுவ அணிவகுப்பு மற்றும் பாரம்பரிய மரியாதையுடன் டிரம்ப் வரவேற்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, இரு தலைவர்களும் உயர்மட்ட தூதுக்குழுக்களுடன் இணைந்து வர்த்தகம், ஈரான் விவகாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளனர். மேலும் போயிங் நிறுவனம்-சீனா இடையே 500 விமானங்கள் வாங்குவதற்காக ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது. பின்னர் ஜின்பிங் அளிக்கும் அரசு விருந்தில் பங்கேற்கிறார்.
நாளை இரு நாட்டு தலைவர்களிடையே தேநீர் சந்திப்பு மற்றும் மதிய உணவுடன் கூடிய ஆலோசனை நடைபெறுகிறது. சீனாவுக்கு புறப்படுவதற்கு முன்பாக நிருபர்களிடம் கூறும்போது, ஈரான் போர் குறித்து ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவேன். ஹார்முஸ் நீரிணை எங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் யார் உதவியும் தேவையில்லை. நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்று டிரம்ப் தெரிவித்தார். தைவான் விவகாரத்தால் இரு நாடுகளுக்கு இடையே புதிய மோதல்கள் ஏற்படுவதை தவிர்ப்பதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, சீனா அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதிக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் இருதரப்பு வர்த்தக உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. நேட்டோ கூட்டமைப்பு நாடுகள், ஈரான் போரில் பங்கேற்க மறுத்ததால், அந்த அமைப்பிலிருந்து வெளியேறுவதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இது பாரம்பரிய நட்பு நாடுகளுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக, அமெரிக்காவும் சீனாவும் இணைந்து உலக விவகாரங்களை வழிநடத்தும் ‘ஜி-2’ எனும் புதிய அரசியல் கோட்பாடு வலுப்பெற தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் மூலமாக ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர சீனா திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தச் சந்திப்பு உலக நாடுகளால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
