தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் மருமகனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி (29) என்பவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பாலையனின் மகள் சினேகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் மேற்பனைக்காடு கிராமத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில், கணவன்-மனைவிக்கிடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் சினேகா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது தந்தை வீட்டான சூரப்பள்ளம் கிராமத்திற்கு சென்று தங்கி வந்தார். இதையடுத்து, மனைவியை அழைத்துச் செல்ல குமாரசாமி நேற்று தனது மாமனார் பாலையன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது குமாரசாமிக்கும் பாலையனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பாலையன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து குமாரசாமியின் கழுத்து, காது மற்றும் தலையின் பின்பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குமாரசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து குமாரசாமியின் சகோதரர் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கொலை குற்றச்சாட்டில் பாலையனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
