சென்னை அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, 9 நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு ஒப்பந்தகாரர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கியதில் குற்றவியல் சதி செய்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், சங்கரானந்த் இன்பரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ரூ.7 கோடி மதிப்பிலான பணிகளில், எந்தவொரு வேலையையும் செய்யாமலேயே ரூ.3.23 கோடி அரசுப் பணம் விடுவிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, எ.வ.வேலுவின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் திருவண்ணாமலை தென்மாத்தூரில் உள்ள அவரது கல்வி நிறுவனங்கள் உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 20 இடங்களில் (சென்னையில் 4, திருவண்ணாமலையில் 4, கரூரில் 7, திண்டுக்கல்லில் 2, கோவையில் 2, திருப்பூரில் 1) லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது, வழக்கிற்குத் தேவையான முக்கிய ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரூ.40 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தற்போது இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
