தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி வசூல்வேட்டை நடத்தி ரூ.100
கோடி வரை மோசடி செய்த புகாரில் சங்க தலைவர் அரசகுமார் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை லஞ்சமாகப் பெற்று மோசடியில் ஈடுபட்ட புகாரில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவரும், தி.மு.க நிர்வாகியுமான பி.டி. அரசகுமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகங்கள் அளித்த அடுக்கடுக்கான புகார்களின் அடிப்படையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது பி.டி.அரசகுமார், தி.மு.க. பிரமுகர் ஆவார்.
தி.மு.க. பெயரை பயன்படுத்தி, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தனக்கு நெருக்கமானவர்கள் என்று கூறி, இவர் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைதான இவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. விசாரணை முடிவடைந்த பிறகு, நீதிமன்ற காவலில் இவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
