காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டும், உணவு செலவின தொகையை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மல்லிகா பேகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் மாவட்ட தலைவர் மல்லிகா பேகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:-
அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். தற்போது ஒரு ஊழியர் 2 முதல் 3 மையங்களைக் கவனிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், குழந்தைகளைக் கவனிப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது. அங்கன்வாடி ஊழியர்களை அரசு

ஊழியர்களாக்க வேண்டும். கடைசி மாத ஊதியத்தில் பாதியை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, ஊழியர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும். கடந்த 5 முதல் 6 மாதங்களாக உணவு செலவினத் தொகை கிடைக்காமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். நிலுவையில் உள்ள இந்தத் தொகையை உடனடியாக விடுவிப்பதுடன், முன்பணமாக ரூ.10,000 வழங்க வேண்டும்.
மேலும் சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் அங்கன்வாடி ஊழியர்களைத் தரக்குறைவாகச் சித்தரிக்கும் நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு உடனடியாகத் தலையிட்டு, இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.
