தூத்துக்குடி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டாம்புளி கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த நோவா மகன் ஆஷிக்தனசிங் (26). இவர் மடத்தூரில் உள்ள ஆயில் மில்லில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தீபிகா கர்ப்பிணியாக இருந்ததால், கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனால் வீட்டைப் பூட்டிவிட்டு ஆஷிக்தனசிங் மருத்துவமனையில் இருந்துள்ளார். சிகிச்சைக்குப் பின், ஜூலை 15 ஆம் தேதி இரவு 10.00 மணி அளவில் ஆஷிக்தனசிங் தனது மனைவியுடன் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த மொத்தம் 17 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்துப் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, நகைகளைத் திருடிச் சென்ற நபர்களைக் கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
