தமிழ்நாடு முதலமைச்சரும், நடிகருமான விஜய் நடித்துள்ள ’ஜனநாயகன்’ திரைப்படம் இன்று (ஜூலை 23) வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலகளவில் 7,500-க்கும் அதிகான திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில், விஜய் ரசிகர்கள் நடனமாடி தங்களுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினர். திரையரங்க முகப்பில் மிகப்பெரிய அளவிலான விஜய் படத்துடனான கட் அவுட், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் அவரது முதல் படமான ’நாளைய தீர்ப்பு’ முதல் கடைசி படமான ’ஜனநாயகன்’ வரை அனைத்து திரைப்படங்களின் உடைய புகைப்படங்கள் வரிசையாக இடம்பெற்றுள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜயின் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று மிகப்பிரம்மாண்டமாக திரைக்கு வந்துள்ள நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள புகழ்பெற்ற ரோகிணி திரையரங்கில் ரசிகர்களின் கொண்டாட்டம் எல்லை கடந்து காணப்பட்டது.
திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு அதிகாலை முதலே திரையரங்க வளாகம் திருவிழாப் போலக் களைகட்டியது. இந்த சிறப்பு திரையிடலைக் காண்பதற்காக பிரபல முன்னணி நடிகை த்ரிஷா, கோயம்பேடு ரோகிணி திரையரங்கிற்கு நேரில் வருகை தந்தார். அவரைப் பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷங்களை எழுப்பி வரவேற்றனர்.
மேலும், திரையரங்கிற்குள் ‘நான் ரெடிதான் வரவா’ உள்ளிட்ட தளபதி விஜயின் ஹிட் பாடல்கள் ஒலிக்கப்பட்டபோது, திரண்டு வந்திருந்த ஏராளமான பெண் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். தியேட்டர் வளாகமே அதிரும் வகையில் அமைந்த இந்த கொண்டாட்ட வீடியோக்களும், த்ரிஷா வருகை தந்த காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.
