திருச்சியில் பதவி ஏற்பு விழா :
ரோட்டரி சங்கம் சார்பில்
2 லட்சம் நாட்டு மர விதை பந்துகளை தூவ திட்டம்
முதல் கட்டமாக 10 இடங்களில் செயல்படுத்த திட்டம்
திருச்சி, ஜூலை,30-
ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக்
அமைப்பின் 2026–27-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் புதிய தலைவராக ரொட்டேரியன்
பி. ராஜ்மோகன், செயலாளராக ரொட்டேரியன் எச். மீனாம்பிகை ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
விழாவில் முன்னாள் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் ஜே. கார்த்திக், முசிறி சட்டமன்ற உறுப்பினர் மு. விக்னேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, அமைப்பின் கனவுத் திட்டமான “தளிர் தலைமுறை” என்ற பசுமை இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தின் 10 முக்கிய மலைப் பகுதிகளில் முதற்கட்டமாக 2 லட்சம் நாட்டு மர விதைப் பந்துகளை தூவும் இலக்குடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கட்டங்களில் இத்திட்டம் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் அடுத்த தலைமுறைக்கு பசுமையான சூழலை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களைச் சமூக சேவையில் அதிகளவில் ஈடுபடுத்தும் நோக்கில், ஒரு புதிய ரோட்டரி சங்கம், ஒரு புதிய ரோட்டராக்ட் சங்கம் மற்றும் 3 புதிய இண்டராக்ட் சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் மூலம் “தளிர் தலைமுறை” திட்டம் மாநிலம் முழுவதும் கொண்டு செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
