தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற நிலையில் 500 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவிக்கப்பட்டது. 500 தாண்டி பயன்படுத்துபவர்களுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் மட்டுமே இலவசம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் விஜய் அரசு பொறுப்பேற்றப் பின் ஜூன், ஜூலை மாதங்களில் மின் கட்டணம் வழக்கத்தை காட்டிலும் இரு மடங்கு அதிகமாக வந்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் விசாரணை நடத்தினர் என கூறப்பட்டாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
இந்நிலையில் சின்னத்திரை தொடர்களில் நடித்த வைஷாலி, தமிழில் சர்க்கார், சீமராஜா, கடுகு, ராஜா மந்திரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். வைஷாலி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 2,3 மாதங்களாக நம்முடைய சாமானிய மக்களுக்கு மின் கட்டணம் அதிகளவு வந்துக் கொண்டிருக்கிறது. எனக்கும் இதே நிலைமை தான். தவெக மின் கட்டணத்தில் 200 யூனிட் இலவசம் என சொன்ன மாதிரி நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை. இப்படியே போனால் மக்களின் வாழ்வாதாரம் ரொம்பவே கஷ்டமாக போய் விடும்.
அதனால் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என சொன்னதை வாபஸ் பெற்று விட்டு இதற்கு முன்னால் மின் கட்டணம் எவ்வளவு வந்துச்சோ அதே மாதிரி மீண்டும் வழங்கினால் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இப்படியே போனால் தவெக அரசு மீதான நம்பிக்கை ரொம்பவே குறைந்து விடும்” என தெரிவித்துள்ளார்.
