திருநெல்வேலி டவுன் கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் பூரணசெல்வி ( 30) மற்றும் அவரது தோழி சண்முகலட்சுமி ( 23) இருவரும் பட்டப்படிப்பு படித்தவர்கள் கியூநெட் எனும் பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பதாக திருநெல்வேலியில் பலரிடம் அறிமுகப்படுத்தி கொண்டுள்ளனர்.
கியூநெட்டில் உறுப்பினராகி ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் நிறைய சம்பாதிக்கலாம்; மாதந்தோறும் பெரிய தொகை கிடைக்கும்; நாளாக நாளாக லட்சக்கணக்கில் வருவாய் வரும் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இளம்பெண்களின் டீசென்டான தோற்றம், தேன்தடவிய பேச்சை நம்பி திருநெல்வேலி மாநகரை சேர்ந்த வேம்பு என்பவரது மனைவி தங்கமாரி(47) கியூநெட்டில் முதலீடு செய்ய ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார்.
முதலீடு செய்த ரூ.5 லட்சத்தை திரும்ப கேட்டார் தங்கமாரி, அதன்பிறகும் இளம்பெண்கள் எந்த பதிலும் கூறவில்லை. இதனிடையே சந்தேகம் அடைந்து திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் புகார் அளித்துள்ளார்.
கமிஷனர் உத்தரவின்பேரில் திருநெல்வேலி ஜங்ஷன் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பண மோசடியில் ஈடுபட்டது திருநெல்வேலி அருகே உள்ள காரையிருப்பு பகுதியைச் சேர்ந்த சண்முகலட்சுமி மற்றும் பூரணசெல்வி ஆகிய 2 பேர் என்பது தெரியவந்த நிலையில் இருவரையும் கைது செய்து மேலும் பலரிடம் இதுபோன்று மோசடி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி நகரில் இரு இளம்பெண்களும் பலரிடம் பணமோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்போம் என போலீசார் தெரிவித்துள்ளனர். பெரிய நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் என சொன்னால் ஒருமுறைக்கு இருமுறை கிராஸ்செக் செய்ய வேண்டும் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
