சென்னை: சென்னை எண்ணூர் கழிமுகம் அருகே கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதக்கும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி மீனவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன. கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் வெளியேற்றப்படுவதால் மீன்கள் செத்து மிதப்பதாக கூறி அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இது தொடர்பாக சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் தற்போது வரை யாரும் சம்பவ இடத்திற்கு வராததால் தாழங்குப்பம்–எண்ணூர் விரைவுச்சாலையில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பந்தபட்ட அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சம்பவ இடத்திற்கு வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவதாக போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக 6 மீனவ கிராமங்களில் சுமார் 3000 குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்காக இந்த ஆற்றை நம்பியுள்ள நிலையில், தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கழப்பத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
