பரந்தூர் விவசாயிகள் போராட்டக் குழுத் தலைவர் சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“பரந்தூரில் பசுமை விமான நிலையத் திட்டத்தை மாநில அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தோம். இந்தப் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான புவியியல் அமைப்பும், சாத்தியக்கூறுகளும் இல்லை என்பதை பல்வேறு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் அரசிடம் தொடர்ந்து எடுத்துரைத்தோம்.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும். நஞ்சை, புஞ்சை உள்ளிட்ட விவசாய நிலங்கள் அழியும் அபாயமும் ஏற்பட்டது.
மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க சுமார் 1,100 ஆண்டுகள் பழமையான கம்பன் கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து உள்ளிட்ட நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்றும், சென்னை மாநகரின் மேற்குப் பகுதிகளில் இருந்து வரும் வெள்ளநீர் தேங்குவதால் எதிர்காலத்தில் சென்னை பெருநகரமே வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும் என்றும் அரசிடம் எடுத்துக்கூறினோம்.
வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு பறவைகள் வந்து செல்லும் பகுதிகள், நெல் மற்றும் புஞ்சை விவசாய நிலங்கள், ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகள் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் விமான நிலையம் அமைக்கத் தேர்வு செய்தது தவறான முடிவு என்பதையும் தொடர்ந்து சுட்டிக்காட்டினோம்.
தற்போது பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக முதல்வருக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நீண்டகாலப் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு அமைந்துள்ளது.
எங்களது போராட்டத்திற்கு ஆதரவாக, எங்கள் கிராமத்தில் உள்ள பிரதான சாலைக்கு ஜோசப் விஜய் பெயரைச் சூட்டுவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
90 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டதாக கூறியது தங்கம் தென்னரசு கூறிய நிலையில்
பரந்தூர் திட்டத்திற்காக 90 விழுக்காடு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், திட்டம் ரத்து செய்யப்பட்டதால் தமிழகத்தின் பொருளாதாரம் பாதாளத்திற்குச் சென்றுவிடும் என்றும் முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தார். அந்தத் தகவல் முற்றிலும் தவறானது.
மொத்தம் 5,740 ஏக்கர் நிலம் திட்டத்துக்குத் தேவையானதாகக் கூறப்பட்ட நிலையில், சுமார் 1,700 ஏக்கர் நிலம் என்பது 90 விழுக்காடு ஆகாது. எனவே, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு மாறானவை.
விவசாய நிலங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்காத வகையில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான மாற்று இடத்தை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
புதிய விமான நிலையம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பின், விவசாயிகள் பாதிக்கப்படாத வகையிலும், நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் வகையிலும் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
மேலும், பரந்தூர் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று சுப்ரமணியன் கூறினார்.
