நீட் தேர்வில் உயிரிழந்த அனிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளான செப்டம்பர் 1 ஆம் தேதி பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு
அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், மாணவர் அமைப்புகள் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க அழைப்பு
பாஜக, ஆர் எஸ் எஸ் தவிர ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நினைவேந்த நிகழ்வில் பங்கேற்க அழைப்பு
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம் குறித்து தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு, முற்போக்கு மாணவர் சங்கம், OG தமிழா, அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் மற்றும் நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் சகோதரர் மணிரத்னம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு
சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் இளையராஜா,
அனிதா உயிரிழந்த பிறகு தமிழ்நாடு போராட்டத்தை நடத்திய போது பல்வேறு மாநிலங்கள் அமைதியாக இருந்தது இன்று நீட் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகிறது.
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கையாக இருக்கிறது.
மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் போராட்டங்களுக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று சொல்லி இருப்பதை வரவேற்கிறோம்.
அனிதா உயிரிழந்த நாளான செப்டம்பர் 1 ஆம் தேதி நீட் எதிர்ப்பு நாளாக அனுசரிக்கும் வகையில் பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் மாலை 5 மணி அளவில் மிகப்பெரிய நினைவேந்தல் நிகழ்வை நடத்த உள்ளோம்.
கல்லூரி மாணவர்கள் அனிதாவை நெஞ்சில் ஏந்தி நீட் எதிர்ப்பு நினைவேந்தல் செய்ய வேண்டும்.
பெசன்ட் நகரில் நடக்க உள்ள நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து மாணவ அமைப்புகளை ஒன்றிணைத்து முன்னெடுக்க உள்ளோம். திரைத்துறையில் உள்ள மாணவர் போராட்டத்திற்கு உடன் நிற்கும் நபர்களை அழைக்க உள்ளோம், அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் இயக்கம் சார்பில் பேசிய நெப்போலியன்
நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர் இயக்கங்கள் போராட்டத்தை மேற்கொள்கிறார்கள் அவர்களுடன் நிற்கும் வகையில் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க உள்ளோம். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் வாய்ப்பு இருந்தால் பங்கேற்பார் அவருக்கும் அழைப்பு விடுக்க உள்ளோம் என்றார்.
OG தமிழா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்
கடந்த 33 நாட்களாக தொடர் போராட்டம் OG தமிழா சார்பில் சென்னை எழும்பூர் மதிமுக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தொடர் போராட்டம் நடைபெறும், இந்தப் போராட்டத்தில் 40 ஆவது நாளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி பெசன்ட் நகர் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்போம் என்று தெரிவித்தார்.
அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் சார்பில் பேசிய மாநில தலைவர் செபஸ்டின்
மாநில அளவில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். தொடர்ந்து நீட் எதிர்ப்பு மனநிலையில் இருக்கும் மாணவர்களின் குரலை பதிவு பதிவு செய்யும் வகையில் தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடத்தப்படும், ஏற்கனவே கர்நாடகாவில் நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்தி உள்ளோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அனிதாவின் சகோதரர் மணிரத்தினம்,
நீட் தேர்வுக்கு எதிரான அடையாளமாக உள்ள அனிதாவின் நினைவு நாளான செப்டம்பர் 1ஆம் தேதியை நீட் தேர்வு எதிர்ப்பு நாளாக அனுசரித்து நினைவேந்தல் நிகழ்வை பெசன்ட் நகரில் நடத்த உள்ளோம்.
தமிழ்நாடு முழுவதும் நினைவேந்தல் நிகழ்வை நீட் தேர்வுக்கு எதிரான போராட்டமாக மாணவர் அமைப்புகள் நடத்த உள்ளார்கள்.
அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து நீட்டுக்கு எதிரான தொடர் பிரச்சாரங்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.
தமிழ்நாடு அரசும் நம் கோரிக்கைக்கு ஆதரவாக உள்ளது. மாபெரும் மக்கள் போராட்டம் மூலம் தான் ஒன்றிய அரசை பணிய வைக்க முடியும்.
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அனைத்து அமைப்புகள் அரசியல் கட்சிகளுக்கும் எங்கள் அழைப்பு இருக்கும். ஆர் எஸ் எஸ் பாஜக தவிர ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்க உள்ளோம்.
