திண்டுக்கல்லில் இளைஞரின் கை, கால்களைக் கட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படும் இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள மாமூக்கோவிலூர் பகுதியில், குளிப்பட்டி அருகே நேற்று இரவு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள குளங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாகத் தேடுதல் மேற்கொண்டனர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் கொலை சம்பவம் நடைபெற்றதற்கான எந்தவித அறிகுறியும் கிடைக்கவில்லை. இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடிய காவல்துறையினர் அங்கிருந்து திரும்பினர்.
இந்த நிலையில், நள்ளிரவில் திண்டுக்கல் அருகே உள்ள குழந்தைப்பட்டியைச் சேர்ந்த குமரேசன் மற்றும் மனோஜ் ஆகிய இருவர், தாங்கள்தான் இளைஞர் ஒருவரைக் கொலை செய்ததாகக் கூறி திண்டுக்கல் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
இதையடுத்து, அவர்கள் தெரிவித்த இடத்திற்கு காவல்துறையினர் சென்று மீண்டும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போதும் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து, சரணடைந்த இருவரையும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று, அவர்கள் காட்டிய இடத்தில் தேடுதல் மேற்கொண்டனர். அப்போது அங்கு கிடந்த இளைஞரின் உடலை காவல்துறையினர் கைப்பற்றினர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இருவரையும் கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
