திருச்சியில் அரசு உதவிபெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு விடுதியில் நேற்று குழந்தை பிறந்தது தொடர்பாக பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்தனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி திருச்சி பொன்மலைபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த மாணவிக்கு நேற்று மாலை விடுதி வளாகத்திலே ஆண் குழந்தை பிறந்துள்ளது. தகவலறிந்த பள்ளி நிர்வாகம் மாணவியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, காவல் துறையினருக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் பொன்மலை அனைத்து மகளிர் போலீஸôர் ஆகியோர் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், பள்ளிக் கல்வித் துறை சார்பில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ஒரு இளைஞரை அந்த மாணவி காதலித்து வந்ததாகவும், அதன்மூலம் கர்ப்பம் உண்டாகி குழந்தை பிறந்துள்ளதாகவும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து இன்று பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இடம் நெய்வேலி என்பதால் வழக்கை நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இன்று மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். குழந்தை பெற்றுக் கொண்ட சிறுமிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
