செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ‘நடுபழநி’ என்றும் பக்தர்களால் பரவலாக அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் சுமார் 2 அடி உயரமுள்ள மரகத முருகன் சிலை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலில் பூட்டை உடைத்து விலைமதிப்பற்ற மரகத முருகன் சிலையை திருடி சென்றுள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன், பொதுமக்களும் பக்தர்களும் அதிர்ச்சியடைந்தனர். இத்திருட்டு குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
